அல்லாஹ்வின் வீடான பள்ளிவாசல்களில் பாரபட்சமான நிலை ஏன்?


  ஃபாத்திமா ஷஹானா 

[ இன்று பள்ளிவாசல்கள் அல்லாஹ்விற்காக அல்லாமல் அப்பள்ளிவாசல்களை நிர்வகிக்கும் நிர்வாகிகளுக்காகவே இயங்கிக் கொண்டிருக்கின்றன.
அல்லாஹ்வை மட்டும் வணங்குவதற்கு கட்டப்படும் பள்ளிவாசல்கள் பெரும்பாலானவற்றில் இன்று அல்வாஹ்வைத் தவிர வேறு நபர்களை வணங்கக்கூடியதான வழிபாடுகள் நடந்து வருகின்றன. ஏன் பள்ளிவாசல்களில் தர்ஹாக்களை வைத்துக் கொண்டு, மரணித்த அந்நபரிடம் பிரார்த்தித்தால் தமது தேவைகள் நிறைவேறும் என அல்லாஹ்வின் பண்புகளை இவ்வுலகில் வாழ்ந்து மரணித்த ஒரு மனிதருக்கு வழங்கி அல்லாஹ்விற்கு அவனது பள்ளிவாசல்களிலேயே இணை கற்பிக்கின்றனர்.
அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அல்லாஹ்விற்கே இணை கற்பிக்கும் நிர்வாகிகள் அல்லாஹ்விற்கு தாம் இணை கற்பிப்பதையே பெரும் பாவமாகக் கருதாத நிலையில் பள்ளிவாசல் சுத்தத்தைப் பற்றியா கவனம் செலுத்தப்போகிறார்கள்?
இன்று பெரும்பாலான பள்ளிவாசல்களின் நிர்வாகம் முஸ்லிம் பெண்களையே மறந்துவிட்டது. ஒரு சிறிய இடமாவது பெண்களுக்கு ஒதுக்கியதாகத் தெரியவில்லை.
''பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதைத் தடுக்காதீர்கள்.என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.'' (நூல்: புகாரி 900, 873, 5238)

இன்று வெளியூருக்கு பிரயாணம் செய்யும் பலர் தம்முடைய வீட்டுப் பெண்கள் தொழுவதற்கு பள்ளிகளில் இடம் கேட்டால் அவர்களுக்கு இடம் கொடுக்கப்படுவதில்லை. இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வார்த்தையை பகிரங்கமாக புரக்கணிப்பதாகும்.]

 அல்லாஹ்வின் வீடான பள்ளிவாசல்களில் பாரபட்சமான நிலை ஏன்?
உலகில் பல நாடுகளில் வாழ்கின்ற முஸ்லீம்களுக்கு பல வகைகளிலும் அவர்களின் உரிமைகள் பரிக்கப்படும் நிலையில் இலங்கையில் வாழும் முஸ்லீம்களுக்கு அதிகமான உரிமைகளையும் சழுகைகளையும் இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளதையும்,வழங்கிக் கொண்டிருப்பதையும் நாம் அன்றாடம் காணக்கூடியதாக உள்ளது.

அந்த உரிமைகளில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றுதான் நமது மத கிரியைகளை சுதந்திரமாக பின்பற்றும் உரிமையாகும்.
ஆனால் கவலைக்குறிய விஷயம் என்னவென்றால் மதத்தை பின்பற்றுவதிலும் மதம் தொடர்பான இடங்களை பயன்படுத்துவதிலும் ஆண்,பெண் என்ற பாகுபாடு காட்டப்படுகிறது.அது போல் பள்ளிகளை நிர்வகிப்பவர்களும் இந்த விஷயத்தில் பொடு போக்காகவே நடந்து கொள்கிறார்கள்.
அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு. (அல்குர்ஆன் 2:114)
இந்த இறைவசனத்திலிருந்து பள்ளிவாசல்கள் அல்லாஹ்விற்குரியனவென்று அல்லாஹ்வே தெளிவாகக் கூறுகின்றான்.அது போல் அல்லாஹ்வை பயந்து கொண்டுதான் அவற்றுக்குள் நுழைய வேண்டும் என்றும் அல்லாஹ் மிகத் தெளிவாக இந்த வசனத்தில் குறிப்பிடுகிறான்.
அல்லாஹ்வின் விருந்தினர்கள் ஒவ்வொரு நாளும் ஐவேளைத் தொழுகைக்காக பள்ளிகளுக்கு வருகிறார்கள் அந்த சந்தர்பங்களில் சில பள்ளிகளில் அவர்களால் தொழுவதற்கு விருப்பம் வருவதில்லை ஏன் என்றால் அந்த பள்ளிகளில் தூய்மை பேணப்படுவதில்லை.மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் தெளிவாக குறிப்பிடுகிறான். அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்? யார் அல்லாஹ்வின் பள்ளிகளை பாழாக்க முனைகிறார்களோ அப்படிப்பட்டவர்கள் பெரும் அநீதி இழைத்தவர்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
இன்று சில பள்ளிவாசல்களைத் தவிர்த்து பல பள்ளிவாசல்களை எடுத்துக்கொண்டால் தொழுமிடத்தை மட்டும் சுத்தமாக வைத்துக் கொண்டு சுற்றிவர இருக்கும் வுழூ செய்யும் இடம், கழிவறை, பள்ளிவாசலை சுற்றியுள்ள வளாகம் இன்னும் கழிவறையில் வைக்கப்பட்டிருக்கும் வாளி போன்றவை தொடுவதற்கும் ஏன் பார்ப்பதற்குக் கூட அருவருப்பான நிலையில் உள்ளது. கழிவறையிலுள்ள துர்நாற்றம் தொழ வருபவர்களை மீண்டும் பள்ளிவாசல்களுக்கு வருவதையே தடுக்கின்றது. பள்ளிவாசல் கழிவறைகளில் வைக்கப்பட்டிருக்கும் வாளிகளிலும், கழிவறைகளிலுமுள்ள அசுத்தம் நம் உடம்பிலிருந்து வெளியாக்கும் கழிவுகளை விட அசுத்தமாகவுள்ளது. சில பள்ளிவாசல்களில் மேல் மாடிகளிலுள்ள தொழும் பாய்கள் கூட தூசி படிந்தவைகளாக உள்ளன. உண்மையில், நகர்ப்புற பள்ளிவாசல்களைவ விட ஏனைய பள்ளிவாசல்களிலேயே இந்த நிலை பெரும்பாலும் நிலவி வருகின்றது.
இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலைநாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர்வழி பெற்றோராக முடியும். (அல்குர்ஆன் 9:17,18)
பள்ளிவாசல்களை நிர்வகிப்பதற்குரிய நிர்வாகிகளின் முதலாவது தகுதி இறையச்சமுள்ளவர்களாக இருக்க வேண்டும். பள்ளிவாசல் நிர்வாகிகள் அல்லாஹ்விற்கு மட்டும் பயந்து அவனுடைய கட்டளைகளை யாருக்கும், எதற்கும் விட்டுக் கொடுக்காது நடைமுறைப்படுத்தக்கூடியவர்களாக இருக்க வேண்டும். மேலுள்ள குர்ஆன் வசனத்திலிருந்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும் என்று அல்லாஹ்வே கூறுகின்றான்.
ஆனால், அல்லாஹ்வை மட்டும் வணங்குவதற்கு கட்டப்படும் பள்ளிவாசல்கள் பெரும்பாலானவற்றில் இன்று அல்வாஹ்வைத் தவிர வேறு நபர்களை வணங்கக்கூடியதான வழிபாடுகள் நடந்து வருகின்றன. ஏன் பள்ளிவாசல்களில் தர்ஹாக்களை வைத்துக் கொண்டு அந்த மரணித்த மனிதருக்கு கராமத்துக்கள் இருந்ததாகவும் எனவே, மரணித்த அந்நபரிடம் பிரார்த்தித்தால் தமது தேவைகள் நிறைவேறும் என அல்லாஹ்வின் பண்புகளை இவ்வுலகில் வாழ்ந்து மரணித்த ஒரு மனிதருக்கு வழங்கி அல்லாஹ்விற்கு அவனது பள்ளிவாசல்களிலேயே இணை கற்பிக்கின்றனர். எனவேதான், மேலுள்ள குர்ஆன் வசனத்தில்; இணை கற்பிப்பவர்கள் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது என்று அல்லாஹ் கூறுகின்றான்.
அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அல்லாஹ்விற்கே இணை கற்பிக்கும் நிர்வாகிகள் அல்லாஹ்விற்கு தாம் இணை கற்பிப்பதையே பெரும் பாவமாகக் கருதாத நிலையில் பள்ளிவாசல் சுத்தத்தைப் பற்றியா கவனம் செலுத்தப்போகிறார்கள்?
பெரும்பாலான பள்ளிவாசல்களில் இந்த நிலை இன்று காணப்படுகின்றது. பள்ளிவாசல்களினுள் டைல்ஸ் பிடித்து அழகான முறையில் அலங்காரங்களுடன் அமைத்து சுத்தமாக வைத்திருக்கின்றார்கள். ஆனால், சுற்றுப்புறச் சூழலும், கழிவறைகளும் ஒரு மனிதனுக்கு பள்ளிவாசலுக்கு வரும் எண்ணத்தையே வரவிடாமல் தடுக்கின்றுது.
''...பெண்களுக்குக் கடமைகள் இருப்பதுபோல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன். ஞானமிக்கவன்.'' (அல்குர்ஆன் 2:228)
மேலுள்ள வசனத்திலிருந்து ஆண்களுக்கு உரிமைகள் உள்ளது போல் பெண்களுக்கும் உரிமைகள் உள்ளது. என அல்லாஹ் தனது திருமறையிலேயே கூறுகின்றான். ஆனால், இன்று பெரும்பாலான பள்ளிவாசல்களின் நிர்வாகம் முஸ்லிம் பெண்களையே மறந்துவிட்டது. ஒரு சிறிய இடமாவது பெண்களுக்கு ஒதுக்கியதாகத் தெரியவில்லை. எல்லா பள்ளிவாசல்களையும் நான் இங்கு குறிப்பிடவில்லை. பெண்களுக்கு வந்து தொழுதுவிட்டு செல்வதற்கு இடம் ஒதுக்கியுள்ள சில பள்ளிவாசல் நிர்வாகங்களும் உள்ளன.
அதற்கு மாற்றமாக தூர பிரயாணங்களில் ஈடுபடும்போது பெண்கள் சில பள்ளிவாசல்களில் இறங்கி தங்களுக்கத் தொழுவதற்கு இடம் கேட்கும்போது பெண்களிற்கான தொழும் இடம் இல்லை எனவும், வேறு ஒரு இடத்தைக் காட்டி அங்கு தொழுமாறும் அந்த இடத்தில் தூசு படிந்து தொழ முடியாத நிலையில் உள்ளதால் எல்லோரும் தொழும் இடத்தில் தொழக் கேட்கின்ற போது இது ஆண்கள் தொழும் இடம் என்று மறுப்பதும் கவலைக்குரிய விஷயம். இது போல் பெண்களுக்கு இஸ்லாத்திலுள்ள உரிமைகள் பற்றி பள்ளிவாசல் நிர்வாகம் பாரபட்சமாக இருக்கும் நிலைமையையும், பெண்களும் முஸ்லிம்கள் என்பதை மறந்த நிலைமையையும், முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெண்களுக்கு இந்த உரிமை அளித்ததை மறந்த நிலைமையையும், பெண்களுக்கு ஏராளமான உரிமை தந்த இஸ்லாத்தில் பெண்களது உரிமைகளை மறந்த நிலைமையையும்.அல்லாஹ் ஏற்றுக் கொள்வானா? நிர்வாகிகளே சிந்திக்க வேண்டாமா?
பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதைத் தடுக்காதீர்கள்.என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி: 900,873,5238)
இன்று வெளியூருக்கு பிரயாணம் செய்யும் பலர் தம்முடைய வீட்டுப் பெண்கள் தொழுவதற்கு பள்ளிகளில் இடம் கேட்டால் அவர்களுக்கு இடம் கொடுக்கப்படுவதில்லை. இது நபியவர்களின் வார்த்தையை பகிரங்கமாக புரக்கணிப்பதாகும்.
குறைந்த பட்சம் அந்தப் பெண்கள் தம்முடைய இயற்கைக் தேவைகளை நிறைவேற்றுவதற்கு கழிவறை வசதிகள் கூட செய்து தராதுள்ளனர். ஆண்களின் கழிவறைகளின் கட்டமைப்பு பெண்களுக்கு ஏற்ற வகையில் இல்லாததால் பெண்களுக்கென எல்லாப் பள்ளிவாசல்களிலும் கழிவறை குறைந்தது ஒன்றாவது கட்டப்பட்டிருக்க வேண்டும். பள்ளிவாசல்கள் அவ்வவ்வூரிலுள்ள முஸ்லிம் மக்கள் அனைவரினதும் ஒரு பொது இடம் என்பதால் எல்லோரினதும் தேவைகளை நிவர்த்தி செய்யும் இடமாகவும், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் இடமாகவும் இருக்க வேண்டும்.
ஆனால், இன்று பள்ளிவாசல்கள் அல்லாஹ்விற்காக அல்லாமல் அப்பள்ளிவாசல்களை நிர்வகிக்கும் நிர்வாகிகளுக்காகவே இயங்கிக் கொண்டிருக்கின்றன. நிர்வாகிகளே உணர்ந்து திருந்தாதவிடத்து இந்த நிலைமை நீடித்துக் கொண்டிருக்கும். அல்லாஹ்வை வணங்குவதற்காகக் கட்டப்பட்டிருக்கும் பள்ளிவாசல்களை தன் சொந்த விருப்பு, வெறுப்புகளுக்காக நிர்வகிக்கும் நிர்வாகிகள் இருக்கும் வரை பள்ளிவாசல்கள் முழுமையாக அல்லாஹ்வுக்காக கட்டுப்பட்;தாக கருதப்படாது.
அன்பின் சகோதர சகோதரிகளே!
அனைவரும் அல்லாஹ்விற்குக் கட்டுப்பட்டு அல்லாஹ்வின் வீட்டை அல்லாஹ்விற்கு விருப்பமான வழிகளில் மட்டும் நிர்வகித்து மக்களுக்குப் பயன்படும் விதத்தில் நிர்வகிக்குமாறு அன்பாய் வேண்டிக் கொள்கிறோம்